Wednesday 28 January 2015

என் கதை - 5: என் கல்யாணம்

மண்டபம் முகாமில் கடமையாற்றிய கணக்குப்பகுதி (Accounting) எழுதுவினைஞர் ஓய்வுபெற்றுச் சென்றதால், அந்த இடத்துக்கு நான் விண்ணப்பம் செய்திருந்தேன். அப்பதவிக்கு தொற்றுநோய் தடுப்புப் பிரிவில் (Quarantine Department) இருந்தும் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். எனக்கு கணக்குப் பகுதியில் அனுபவம் இருந்தபடியால் சுகாதார இலாகாவின் தலைவர் (Director of Health) என்னைத் தெரிவு செய்து 1959ம் ஆண்டு ஜனவரியில் வேலையேற்கும்படி பணித்தார். அதன்படி, 59 ஜனவரியில் மண்டபம் முகாமில்  வேலையில் அமர்ந்தேன். அங்கு எனக்கொரு வீடும் தரப்பட்டிருந்தது.

தொற்றுநோய் அபாயம் காரணமாக, அங்கு வேலை செய்பவர்கள் வெளியில் சாப்பாடு எடுக்கக்கூடாது. எனக்கு சமையல் நன்கு தெரிந்திருந்தாலும், நேரமின்மை காரணமாக நான் ஒரு பையனை வேலைக்கு அமர்த்தி சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அதே காலப்பகுதியில் இரண்டு எழுதுவினைஞர்கள் குடிவரவு-குடியகல்வு இலாகாவுக்கு மாற்றலாகி மண்டபம் முகாமுக்கு வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சிங்களவர், மற்றவர் யாழ்ப்பாணத்தில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டாமவர், எனது அக்காவின் மகனுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்து, ஒருசேர பரீட்சையில் சித்தியடைந்தவர். அவர் மாற்றலாகி மந்தம் மண்டபம் வந்தபொழுது தனது தாயாரையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அவர்களுக்கும் ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. எனக்கு, பையனை வைத்துச் சமையல் செய்து சாப்பிடுவதும், வீட்டைப் பராமரிப்பதும் கட்டுப்படியாகவில்லை. அதனால், நானும் துணைக்காக ஆச்சியை கூட்டிக்கொண்டு வருவதற்கான ஒழுங்குகளைச் செய்து பாஸ்போர்ட்டும் எடுத்துவிட்டேன். ஆனால் அக்காவும் போலிஸ் அண்ணரும் அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆச்சியை இந்தியா வரவழைக்க முடியாததால், நான் கல்யாணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்து, கோப்பாயில் கூட்டுறவுப் பரிசோதகராக இருந்த அண்ணருக்கு நிலைமையை விளக்கி கடிதம் எழுதினேன். அவரும் போலிஸ் அண்ணருமாக சேர்ந்து, எமது தூரத்து உறவாக தென்மராட்சி பகுதியில், சாவகச்சேரி அருகில் உள்ள ஊரான மறவன்புலத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பினர். பெண்ணின் தந்தையார் கேகாலை இறப்பர் தோட்டத்தில் கண்காணிப்பாளராக உயர்ந்த பதவியில் இருந்ததால், அவர்கள் மிகவும் வசதியாக அங்கே வாழ்ந்து வந்தனர். பெண் கேகாலையில் இருந்ததால், பெண்பார்க்க வேண்டுமென்றால், கேகாலைக்கு போய்த்தான் பார்க்கவேண்டும் என்று அண்ணர் கடிதம் எழுதியிருந்தார்.


எனவே, குடும்பத்தினரையும் தம்பியையும், பெண் பார்க்க கேகாலைக்கு வரச்சொல்லி, நானும் லீவு எடுத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து அங்கே வந்து பெண் பார்க்கும் படலத்தை முடித்துக்கொண்டு சம்மதம் தெரிவித்தேன். அடுத்த மாதமே கல்யாணத்தையும் செய்துகொண்டு மண்டபம் முகாமுக்கு வந்து வேலையைத் தொடர்ந்தேன். அடுத்து வந்த சில மாதங்களில், எனக்கு மாற்றம் கொடுத்த சுகாதார சேவை அதிபராக இருந்த டாக்டர் ஓய்வுபெற்றார்.அவருடைய இடத்துக்கு தொற்றுநோய் தடுப்புப் பகுதியில் டைரக்டராக இருந்த டாக்டர் வந்தவுடன் என்னோடு மண்டபம் முகாமுக்கு விண்ணப்பித்த இன்னொருவரை என்னுடைய இடத்துக்கு நியமித்துவிட்டார். விளைவாக, ஆறு மாதங்கள் கழித்து, என்னைக் கொழும்புக்கு மாற்றிவிட்டார்கள்.. அந்தக் குறுகிய காலத்துக்குள் நானும் மனைவியும் தமிழ்நாட்டில் மதுரையை மட்டும்தான் பார்க்கக்கூடியதாக இருந்தது.

--------
தொடரும் 

No comments:

Post a Comment

Popular Posts