எங்கள் குடும்பம் கமக்காரர் (விவசாயி) குடும்பம். அப்பு
(அப்பா), ஆச்சி (அம்மா), நான்கு அக்காமார், மூன்று அண்ணன்மார், நான் மற்றும் ஒரு
தம்பி என மொத்தம் பதினோரு அங்கத்தவர்கள். எங்களுக்கு இனசனம் (உறவினர்) அதிகம்
இருந்தாலும் அவர்களுக்கு ஏனோ எங்களைப் பிடிப்பதில்லை. அப்புவும் ஆச்சியும் கல்வி
கற்றதில்லை. அப்புவுக்கு கையெழுத்துப் போட மட்டும்தான் தெரியும். ஆச்சிக்கு
அதுவும் தெரிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் நான் ஆச்சிக்கும் மூத்த அக்காவுக்கும்
கையெழுத்து போட பழக்கினேன்.
நாங்கள் கமக்காரர்களாக இருந்தாலும் ஊரில் பிற
கமக்காரர்களைப் போல ஓகோ என்று இல்லை. (யாழ்ப்பாணத்துச் சமூகக் கட்டமைப்பில்
விவசாயிகளே அந்தஸ்திலும் பொருளாதாரத்திலும் பிறரைவிட உயர்ந்தவர்களாக மதிக்கப்பட்டார்கள்)
காரணம், எங்கள் மூத்த அண்ணன்களின் படிப்புச் செலவுக்கென்று ஆச்சியின் சீதனத்
(வரதட்சிணை) தோட்டக் காணிகளை அப்பு விற்று அண்ணனை ஒரு பயிற்றப்பட்ட
ஆசிரியராக்கிவிட்டார். இது நடந்தது 1917-1918 ஆண்டுகளில். பயிற்சி முடிந்ததும்
அண்ணர் வெளியூரில் தொழில் செய்யப் புறப்பட்டுவிட்டார். விடுமுறை நாட்களில் ஊருக்கு
வந்தால் அவருக்கு இராசமரியாதைதான். அந்தக்காலத்தில் ஊரில் யாரும் அரசாங்கத்தில்
தொழில் செய்யவில்லை என்பதே காரணம். “கோழி மேய்ச்சாலும் கோறனமேந்தில
(கவர்மென்ட்டில) மேய்க்க வேணும்” என்பது ஊரின் சொல்வழக்கு.
இருந்தாலும் பிறகு நடந்த சில குடும்பச சச்சரவுகளால்
இரண்டு அக்கா, இரண்டு அண்ணா, அப்பு ஆச்சி, நான், தம்பி என குடும்பம் குறுகிவிட்டது.
இப்படி இருந்துவரும்போது அப்புவுக்கு வயிற்றில் கட்டி ஒன்று வளர்ந்து அவர் மந்திகை
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் தவறிவிட்டார். அதன்பின்,
குடும்பத்தின் வருமானத்துக்காக, ஆச்சி (என் அம்மா) காய்கறிகள் விளைவித்து விற்றுக்கொண்டிருந்தார்.
அவருக்கு பகுதிநேரமாக உதவியபடி நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம்.
வடமராட்சியில் நெல் போன்ற தானியங்களை பெரிய அளவில்
விளைவிப்பதில்லை. மாறாக, ஆச்சி, காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை விளைவித்தும்,
மாடு, ஆடு, கோழி
வளர்த்தும், சிறிய
அளவில் தோட்டம் செய்தும் அவற்றை சேனா சந்தையில் (இப்பொழுது நெல்லியடி மார்க்கெட்) விற்று
வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவர்.
அந்தக்காலத்தில் சந்தை பின்னேரம்
நான்கு மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நடக்கும். சந்தையில் கடைகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு
வியாபாரியும் நிலத்தில் சாக்கு விரித்து, குப்பி விளக்கு வெளிச்சத்தில் பொருட்களை பரப்பி
வைத்திருப்பர். அந்த
நேரத்தில் தான், மீன்களும்
பிடிக்கப்பட்டு சந்தைக்கு எடுத்து வரப்படும்.
அந்தக்காலத்தில், காலை எழுந்ததும் மாடுகளில் பால் கறந்து தேநீர்க்
கடைகளுக்கு விநியோகித்த பின்னர்தான் பள்ளிக்கூடம் செல்ல முடியும். பள்ளிக்கூடம்
விட்டு வந்த உடனே மாடுகளுக்கு தீவனமான பனையோலைகளை எடுத்துவரவேண்டும். அதற்கென்று
போய், காத்திருந்து எடுத்து வருவதற்குள் இரவு ஏழு மணியாகிவிடும். அந்த
நேரத்தில்தான், பனையோலை தலையிலும், பாடங்கள் எழுதப்பட்ட கடதாசி கையிலுமாக பள்ளிப்
பாடத்தை மனனம் செய்துகொண்டே நடந்து வருவோம். இப்படியே தமிழ் வழியில் SSC (இன்றைய இலங்கையில் GCE O/L அல்லது இந்தியாவில் 10thக்கு சமமானது)
வரையில் படித்துவிட்டேன். இருந்தும்
ஆங்கிலவழியில் படிக்க வேண்டும் என்பது என் கனவாகவே இருந்தது.
அப்பொழுது ஆங்கில பாடசாலையில் பணம் கட்டித்தான் படிக்க முடியும். எமது பெற்றோரின் எட்டுப்பிள்ளைகளுக்கும்
பணம் செலுத்தி ஆங்கிலக்கல்வி தருவதற்கு எங்கள் குடும்பத்திடம் பணவசதி இருக்கவில்லை.
ஆனால் அந்தக்காலத்தில் ஒரு குடும்பத்திலிருந்து ஆங்கிலக்கல்வி படிக்கும் முதல்
பிள்ளைக்கு முழுத்தொகையும்,
இரண்டாவதாக படிக்கும் பிள்ளைக்கு அரைத்தொகையும் செலுத்தினால் மூன்றாவது பிள்ளை
இலவசமாக கற்கக்கூடிய சலுகை காணப்பட்டது. இதன் காரணமாகவும்,
ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டும் என்ற
எனது அவா இருந்ததாலும் நான் ஆங்கிலப்பள்ளியில் (Vathiri Sacred Heart College - வதிரி திரு இருதயக் கல்லூரி) சேர்க்கப்பட்டேன்.
அந்தக் காலத்தில் தமிழ்வழி வகுப்புக்களில் ஆங்கிலப் பாடமானது சிரத்தையாக சொல்லித் தரப்படுவதில்லை.
ஆசிரியர்கள் ஏனோதானோவென்றுதான் படிப்பிப்பார்கள். நாமும் அவ்வாறுதான் படித்துக்கொண்டிருந்தோம்.
எனக்கு ஆங்கிலம் எதுவுமே புரியாத காரணத்தால், எனக்கு
ஆறாம் ஆண்டிலிருந்து படிக்க
விருப்பமில்லை.
எனவே பாடசாலைக்குச் செல்ல மாட்டேன் என்று வீட்டில் அடம்பிடித்து அழுதேன். ஆச்சி
மிகவும் கவலைப்பட்டு எனது மூன்றாவது அண்ணரிடம் (அவர் அப்போது ஆங்கிலவழி SSC படித்துக்கொண்டிருந்தார்)
என் நிலைப்பாட்டைச் சொல்லி, குருவானவரிடம்
பேசச்சொன்னார்.
அண்ணனும் குருவானவரிடம் போய் “இவனை
கீழ்வகுப்பில் சேர்த்தால் அவன் வேகமாகப் படித்து மற்றவர்களைவிட முன்னுக்கு வருவான்” என்று
உறுதியளித்தார்.
என்னைக் கவனித்த தலைமையாசிரியர் (Rev. Brother பாக்கியநாதர்), தனக்கு கீழிருந்த குருவானவரிடம் “இவனை
மூன்று மாதங்களுக்கு முதல் வகுப்பில் விடுவோம். பிறகு இவனது முன்னேற்றத்தைக் கவனித்து மேல்வகுப்புக்களில்
சேர்க்கலாம்”
என்று சொல்லி என்னை முதலாம் தரத்தில் (Grade
1, இந்திய UKGக்கு சமமானது)
சேர்த்தார்.
அப்போது எனக்கு வயது 18!
முதல் தவணையின் இறுதியில்,
நான் இரண்டாம் வகுப்பில்
சேர்க்கப்பட்டேன். வருடமுடிவில் வகுப்பேற்றும் போது என்னை 6ம்
வகுப்பு C பிரிவில் சேர்த்தனர்.
அந்த வருடம்தான் எனது தம்பியும்
ஐந்தில் இருந்து ஆறாம் வகுப்பு A பிரிவிற்கு வகுப்பேற்றப்பட்டார்.
வருடமுடிவில் இருவரும்
சித்தியடைந்து அடுத்த வருடம் ஏழாம் வகுப்பு A க்கு வகுப்பேற்றப்பட்டோம். அந்த
வகுப்பிலிருந்து ஒவ்வொரு வருடமும் நாங்கள் வகுப்பேற்றப்பட்டு சிரேஷ்ட தராதர
வகுப்பில் (SSC) இரண்டு வருட படிப்பை முடித்து பரீட்சைக்குத் தோற்றினோம். எங்களுடன்
சேர்த்து 55 பொடியங்கள் அந்தப் பரீட்சைக்குத் தோற்றினோம்.
அவர்களில் ஆக ஆறு மாணவர்கள் தான்
பூரண சித்தி எய்தினர். அந்த
ஆறு பேரில் நானும் எனது தம்பியும் அடங்குவோம்.
---------
தொடரும்
---------
தொடரும்