Wednesday 28 January 2015

என் கதை - 6: மூன்று பிள்ளைகள்

நான் குடும்ப சகிதம் கொழும்புக்கு வந்து அங்கு வேலைசெய்தேன். சில மாதங்களின் பின் கேகாலைக்கு மாற்றம் எடுத்துக்கொண்டுபோய் மனைவியின் தந்தையார் வீட்டில் தங்கியிருந்து வேலைசெய்து கொண்டிருக்கும்போதுதான் 1962இல் எனது மூத்த மகள் பிறந்தாள். அதன்பின் யாழ்ப்பாணம், சாவகச்சேரிக்கு மாற்றலாகி நான்கு வருடம் வேலை செய்தபோது 1967ம் ஆண்டு இரண்டாவது மகளும் 1971ம் ஆண்டு மூன்றாவது மகளும் பிறந்தார்கள்.

எனக்கு மூன்று குழந்தைகளும் பெண்ணாக பிறந்துவிட்டனவே என்று ஆச்சிக்கு சொல்லொணாக் கவலை. இருந்தும் எனது துணிவும் விடாமுயற்சியும் அவருக்கு நம்பிக்கை கொடுத்தது. “மூன்று பெட்டைகளும் மூன்று இராசாக்களைக் கொண்டுவருவாளைவை” என்று அவர் அடிக்கடி சொல்லுவார். அது அவரின் அனுபவமாக இருக்கும். அதாவது, ஆண் பிள்ளைகளெல்லாம் பிறந்தவீட்டை விட்டு பெண்வீட்டுக்குப் போய்விடுவார்கள் என்பதை அப்படி சொன்னார்.

குறிப்பு: இந்திய வழக்கமான திருமணத்தின்பின் பெண்களை பிறந்தவீட்டிலிருந்து மாமியார் வீட்டுக்கு அனுப்புவதற்கு மாறாக, யாழ்ப்பாணச் சமூகங்களில் கல்யாணமான பின் ஆண் பிள்ளைகள்தான் மாமனார் வீட்டுக்கு அல்லது தனிக்குடித்தனத்துக்கு அனுப்பப்படுவர். எனவே, இங்கு பொதுவாக பெண்பிள்ளைகளே பெற்றோரை வயதான காலத்தில் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், வரதட்சிணை / சீதனம் இந்திய சமூகங்களைப் போலவே, பெண்வீட்டாரால் ஆண்வீட்டுக்கு கொடுக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் உயர்சாதி என அழைக்கப்படும் வேளாளர்களின் குடும்பங்கள் ஏழ்மையில் இருந்தாலும், சொந்தமாக ஏராளமான ஏக்கர் காணிகளை வைத்திருப்பார்கள். அந்நிலங்களில், அவர்கள் குடும்பமாக விவசாயத்தில் ஈடுபட்டால் சொந்தமாகவோ அல்லது அவர்கள் வேறு வேலைகள் செய்துகொண்டிருந்தால் அந்நிலங்களை வேறு குத்தகைக்கு கொடுத்தோ தோட்டம் அல்லது நெற்செய்கையை தொடர்ந்து செய்துவருவார்கள். இந்நிலை இன்றும்கூட தொடர்ந்துவருகின்றது. அவ்வாறான குடும்பங்கள் வெளிநாட்டில் உழைத்தாலும், மருத்துவர், பொறியியலாளர், சட்டத்தரணி போன்ற வேலைகளில் ஈடுபட்டு நன்றாக சம்பாதித்தாலும் குடும்பத்தின் சொத்தின் பெரும்பகுதி காணிகளாகவும், நெல் வயல்களாகவும், அதிலிருந்து வரும் விளைச்சலாகவும்தான் இன்றும் இருந்துவருகின்றது. எனவே, இன்றுகூட வரதட்சிணை / சீதனமாக பணம், நகை, வாகனங்கள் தரப்பட்டாலும் அவற்றைவிட முக்கியமாக காணி நிலங்களே சீதனமாக எதிர்பார்க்கப்படுகின்றன.

சாவகச்சேரியில் வேலைபார்க்கும் போது, வடமராட்சி, வதிரியில் பதினையாயிரம் ரூபாய்க்கு ஒரு தோட்டம் வாங்கி அதில் வேலைநேரம் போக, பகுதி நேரமாக வாழை பயிர் செய்து, நான்கு வருடங்களாக விளைச்சல் எடுத்து வந்தேன். அந்தக்காலத்தில் எனக்கு தோட்டவேலை தவிர நெல்வயல் வேலைகள் எதுவும் தெரியாது. அதற்கு எனது சொந்த ஊரான வடமராட்சியில் (வதிரி) வயல்கள் இல்லாததும் ஒரு காரணம். எனது மனைவியின் ஊரான தென்மராட்சி, மறவன்புலோவில் தோட்டங்கள் இல்லை. ஊர்முழுதும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்த நெல் வயல்கள்தான். எனவே, மனைவியின் சீதனக் காணிகள் எல்லாம் வயலும் பனந்தோப்பும் தென்னங்காணியுமாக இருந்தது. அவர்கள் கேகாலையில் இருந்ததால் காணிகளை குத்தகைக்கு விட்டிருந்தனர். நான் சாவகச்சேரிக்கு மாற்றலாகி வந்தவுடன் வயல் காணிகளை குத்தகைக்காரர்களிடமிருந்து மீட்டு கூலிக்கு ஆள் போட்டு செய்கை செய்யத் தொடங்கினேன். உழவு வேலை எல்லாம் உழவு இயந்திரத்தால் செய்துகொண்டு, மற்றவேலைகளை கூலியாட்களை வைத்து செய்துவந்தேன்.

மூத்த மகளுக்கு ஐந்து வயதானவுடன், சாவகச்சேரி பெண்கள் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவந்தார். இரண்டாவது மகளும் அதே பாடசாலையிலேயே படித்து இருவரும் அங்கேயே க.பொ.த சாதாரண தரம் (இந்தியாவில் பத்தாம் வகுப்புக்கு நிகர்) சித்தியடைந்தனர். இவர்களின் படிப்புக்காக சாவகச்சேரியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அங்கு குடும்பமாக வசித்து வந்தோம். மூன்றாவது மகள் ஒரு வயதாக இருக்கும்போது, எனக்கு பதுளை கந்தோருக்கு மாற்றம் வந்தது. குடும்பத்தை மறவன்புலவில் விட்டுவிட்டு நான் பதுளைக்கு செல்லவேண்டி ஏற்பட்டது. நான், பதுளையில் வேலை செய்துகொண்டும், மறவன்புலத்தில் எனது வயல்களை விதைப்பித்து வந்தேன். அத்துடன் வடமராட்சி வதிரியில் இருந்த தோட்டத்தை குத்தகைக்கு கொடுத்துவிட்டிருந்தேன். பிள்ளைகளின் படிப்புக்காகவும் போக்குவரத்து வசதிக்காகவும் நாவற்குழியின் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அங்கே குடும்பமாக: மனைவி, பிள்ளைகள், மாமா, மாமி [மனைவியின் பெற்றோர்], மைத்துனி [மனைவியின் தங்கை] ஆகியோரை இருக்க வைத்தேன்.


பதுளையில் வேலை செய்யும்போதும், மாதத்தில் ஒரு முறையாவது மறவன்புலவுக்கு வந்துவிடுவேன். வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு பதுளையிலிருந்து கண்டி பஸ் எடுத்து பின்னேரம் ஐந்து மணிக்கு கண்டி வந்து, ஐந்து முப்பதுக்கு யாழ்ப்பாண பஸ் எடுத்தால், அது விடியற்காலை இரண்டு முப்பது மணியளவில் நாவற்குழியை வந்தடையும். வார இறுதியை அங்கே கழித்துவிட்டு, ஞாயிறு பின்னேரம் யாழ்தேவியில் (யாழ்ப்பாணம்-கொழும்பு தடத்தில் பயணிக்கும் புகையிரதம்) ஏறினால் பொல்காவலை ஸ்டேஷனில் இரவு ஒன்பது மணியளவில் இறங்கி, பதுளை தபால் புகையிரதத்தைப் பிடித்து, மறுநாள் திங்கள் காலை பதுளை கந்தோருக்கு வேலைக்குப் போவேன். பாடசாலை விடுமுறை காலங்களில் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பதுளைக்குக்கு வந்து விடுமுறையைக் கழிப்பார்கள்.

என் கதை - 5: என் கல்யாணம்

மண்டபம் முகாமில் கடமையாற்றிய கணக்குப்பகுதி (Accounting) எழுதுவினைஞர் ஓய்வுபெற்றுச் சென்றதால், அந்த இடத்துக்கு நான் விண்ணப்பம் செய்திருந்தேன். அப்பதவிக்கு தொற்றுநோய் தடுப்புப் பிரிவில் (Quarantine Department) இருந்தும் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். எனக்கு கணக்குப் பகுதியில் அனுபவம் இருந்தபடியால் சுகாதார இலாகாவின் தலைவர் (Director of Health) என்னைத் தெரிவு செய்து 1959ம் ஆண்டு ஜனவரியில் வேலையேற்கும்படி பணித்தார். அதன்படி, 59 ஜனவரியில் மண்டபம் முகாமில்  வேலையில் அமர்ந்தேன். அங்கு எனக்கொரு வீடும் தரப்பட்டிருந்தது.

தொற்றுநோய் அபாயம் காரணமாக, அங்கு வேலை செய்பவர்கள் வெளியில் சாப்பாடு எடுக்கக்கூடாது. எனக்கு சமையல் நன்கு தெரிந்திருந்தாலும், நேரமின்மை காரணமாக நான் ஒரு பையனை வேலைக்கு அமர்த்தி சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அதே காலப்பகுதியில் இரண்டு எழுதுவினைஞர்கள் குடிவரவு-குடியகல்வு இலாகாவுக்கு மாற்றலாகி மண்டபம் முகாமுக்கு வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சிங்களவர், மற்றவர் யாழ்ப்பாணத்தில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டாமவர், எனது அக்காவின் மகனுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்து, ஒருசேர பரீட்சையில் சித்தியடைந்தவர். அவர் மாற்றலாகி மந்தம் மண்டபம் வந்தபொழுது தனது தாயாரையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அவர்களுக்கும் ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. எனக்கு, பையனை வைத்துச் சமையல் செய்து சாப்பிடுவதும், வீட்டைப் பராமரிப்பதும் கட்டுப்படியாகவில்லை. அதனால், நானும் துணைக்காக ஆச்சியை கூட்டிக்கொண்டு வருவதற்கான ஒழுங்குகளைச் செய்து பாஸ்போர்ட்டும் எடுத்துவிட்டேன். ஆனால் அக்காவும் போலிஸ் அண்ணரும் அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆச்சியை இந்தியா வரவழைக்க முடியாததால், நான் கல்யாணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்து, கோப்பாயில் கூட்டுறவுப் பரிசோதகராக இருந்த அண்ணருக்கு நிலைமையை விளக்கி கடிதம் எழுதினேன். அவரும் போலிஸ் அண்ணருமாக சேர்ந்து, எமது தூரத்து உறவாக தென்மராட்சி பகுதியில், சாவகச்சேரி அருகில் உள்ள ஊரான மறவன்புலத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பினர். பெண்ணின் தந்தையார் கேகாலை இறப்பர் தோட்டத்தில் கண்காணிப்பாளராக உயர்ந்த பதவியில் இருந்ததால், அவர்கள் மிகவும் வசதியாக அங்கே வாழ்ந்து வந்தனர். பெண் கேகாலையில் இருந்ததால், பெண்பார்க்க வேண்டுமென்றால், கேகாலைக்கு போய்த்தான் பார்க்கவேண்டும் என்று அண்ணர் கடிதம் எழுதியிருந்தார்.


எனவே, குடும்பத்தினரையும் தம்பியையும், பெண் பார்க்க கேகாலைக்கு வரச்சொல்லி, நானும் லீவு எடுத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து அங்கே வந்து பெண் பார்க்கும் படலத்தை முடித்துக்கொண்டு சம்மதம் தெரிவித்தேன். அடுத்த மாதமே கல்யாணத்தையும் செய்துகொண்டு மண்டபம் முகாமுக்கு வந்து வேலையைத் தொடர்ந்தேன். அடுத்து வந்த சில மாதங்களில், எனக்கு மாற்றம் கொடுத்த சுகாதார சேவை அதிபராக இருந்த டாக்டர் ஓய்வுபெற்றார்.அவருடைய இடத்துக்கு தொற்றுநோய் தடுப்புப் பகுதியில் டைரக்டராக இருந்த டாக்டர் வந்தவுடன் என்னோடு மண்டபம் முகாமுக்கு விண்ணப்பித்த இன்னொருவரை என்னுடைய இடத்துக்கு நியமித்துவிட்டார். விளைவாக, ஆறு மாதங்கள் கழித்து, என்னைக் கொழும்புக்கு மாற்றிவிட்டார்கள்.. அந்தக் குறுகிய காலத்துக்குள் நானும் மனைவியும் தமிழ்நாட்டில் மதுரையை மட்டும்தான் பார்க்கக்கூடியதாக இருந்தது.

--------
தொடரும் 

Popular Posts