1954ம் ஆண்டு. நான் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது,
அக்காவுக்கு கல்யாணம் செய்வதைப் பற்றி ஆச்சி ஒரு கடிதம் எழுதியிருந்தார். ‘அக்காவுக்கு
கலியாணம் செய்யவேண்டும், வயசும் ஏறிக்கொண்டு போகுது’ என்று சொல்லி, அக்காவுக்குஅவருக்கு
மாப்பிள்ளை பார்ப்பதாகவும், ஒரு இரண்டாம்தார மாப்பிள்ளை பொருந்தி வருவதாகவும்,
அக்காவின் ஜாதகப்படி, இரண்டாம் தாரம்தான் அமையுமென்று ஜோதிடர் சொல்வதாகவும்
எழுதியிருந்தார். நான் விசாரித்ததில், அவர் ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர்
என்றும் அவருக்கு ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரு குழந்தைகள் உண்டென்றும் அறிந்தேன்.
மேலும், சீதனம் அதிகம் கேட்கமாட்டார்கள் என்பதால், நானும் எனது சம்மதத்தை
தெரிவித்தேன். அந்த வருடமே அக்காவின் விவாகம் நடந்து முடிந்தது. சீதனமாக, ஆச்சியின்
சேமிப்பிலிருந்த சில நகைகளும், எனது கடைசி அண்ணரின் பங்காக ரூபாய் ஐயாயிரம் காசும்
கொடுத்தனர். நானும் தம்பியும் சேர்ந்து, எங்களது பங்காக, ஐயாயிரம் ரூபாய் செலவில்,
நாங்கள் குடியிருந்த காணியில் இரண்டு அறைகளுடனான ஒரு கல்வீடு கட்டித் தருவதென்றும்
ஐயாயிரத்திற்கு மேற்பட்ட செலவை அக்காவும் அத்தானும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும்
முடிவு செய்து அவரின் திருமணத்தையும் முடித்து வைத்தோம்.
அக்கா, அத்தான் படிப்பித்த கம்பளையில் உள்ள பாடசலைக்குப் போய் சிலகாலம் இருந்துவிட்டு ஊருக்குவந்து
ஆச்சியுடன் இருந்தார். நான் வவுனியாவில்
உள்ள சௌக்கிய சேவை அதிபர் காரியாலயத்தில் வேலை செய்தபோது, நான் ஒத்துக்கொண்டபடி
வீடு கட்டி, கூரை போட்டு ஓட்டால் வேய்ந்து முடிய, ரூபாய் ஐயாயிரம் முடிவடைந்ததால்,
மேற்கொண்டு வேலைகளை அத்தானிடம் ஒப்படைத்தோம். இருந்தும் அவ்வீடு அவர்களால் கட்டி
முடிக்கப்படவில்லை.
1959ம் ஆண்டு ஜனவரி மாதம் எனக்கு வவுனியாவிலிருந்து
கொழும்புக்கு மாற்றம் வந்தது. கொழும்பில் நான் முன்பிருந்த வெள்ளவத்தை வீட்டிலேயே
ஒன்றுவிட்ட அண்ணரின் மகனின் அறையிலேயே தங்கிருந்தேன். அப்போது, எனது இலாகாவின்
கிளை இலாகாவான தொற்றுநோய் தடுப்பு இலாகாவின் (Quarantine Department) ஒரு பகுதி இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி
மண்டபத்தில் இயங்கி வந்தது. அந்தத் தொற்றுநோய் தடுப்பு இலாகாவுடன் இலங்கை குடிவரவு
குடியகல்வு (Immigration &
Emigration) இலாகாவும் இயங்கி வந்தது. குடிவரவு/குடியகல்வு
இலாகாவில் இலங்கை வருவோர்க்கு விசா வழங்கும் வேலை மட்டுமே நடைபெற்று வந்தாலும்
தொற்றுநோய் தடுப்பு பகுதியில் ஒரு இலாகாவுக்கான சகல வேலைகளும் –டாக்டர், நேர்ஸ்,
ஆண் பெண் தாதிமார், அதற்குத் தலைவராக இலங்கையிலிருந்து ஒரு டாக்டர், மற்றும்
ரியாலய வேலைகளை மேற்பார்வை செய்யும் உதவியாளர், எழுதுவினைஞர்கள் என மிகவும்
பரபரப்பாக இயங்கி வந்தது.
தொடரும்...
(அடுத்து - இந்தியா: மண்டபம் முகாம்)