Monday 13 October 2014

என் கதை - 2: இருவர்

நாங்கள் இருவரும் பரீட்சையில் சித்தியடைந்ததையிட்டு எங்கள் குடும்பம் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தது. இருந்தும் குடும்பத்தில் வறுமையே தாண்டவமாடியது. எனவே எங்கள் குலத்தொழிலான கமத்தொழிலில் (விவசாயம்) ஈடுபட்டோம். படிக்கும்போது பகுதிநேர தொழிலாக செய்துவந்த தோட்டவேலையில் முழுநேரமாக ஈடுபட்டோம். அப்பொழுது ஏற்கனவே SSC சித்தியடைந்த அண்ணன் கூட்டுறவுப் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். வைரவக் கடவுள் கிருபையால் அவருக்கு மட்டக்களப்பு மூதூர் பகுதியில் வேலை கிடைத்தது. அவர் வெளியூர் போனதன் பின் எங்கள் குடும்பப் பொறுப்பு எங்கள் தாயார் தலையில் ஏறியது. அவருக்கு உறுதுணையாக நாங்களும் இருந்துவந்தோம்.

இப்படி இருந்துவரும் பொழுது 1952 இல், இலங்கை அரச வர்த்தமானியில் புகையிரதப் பதிவினரால் Underguard வேலைக்கு (புகையிரதம் புறப்படுவதற்காக கொடி காட்டுதல், புகையிரதப் பெட்டிகளை இணைத்து, பிரித்து விடுதல் போன்ற பணிகள் அடங்கிய வேலை) விளம்பரம் வந்தது. அதற்கு விண்ணப்பம் அனுப்பினேன். கொழும்பில் மருதானையில் பரீட்சை என்று கடிதம் வந்தது. அன்றுவரை புகைவண்டியையே காணாமல் இருந்த எனக்கு, கொழும்புக்குப் புகைவண்டியில் போவதென்றால் பயமாக இருந்தது. மேலும் ஆச்சிக்கும் அக்காவுக்கும் இந்த வேலையில் அறவே விருப்பம் இல்லை. ரயில் பெட்டிகளை சேர்க்கும் போது பெட்டிகளுக்கு இடையே நசுங்கி விடுவாய் என்று பயந்துகொண்டிருந்தார்கள்.

பின்னர் எழுதுவினைஞர் வேலைக்கு விளம்பரம் வந்தபோது 18-21 வயது நிரம்பிய SSC சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றனர். அதற்கு நாங்கள் இருவரும் விண்ணப்பித்து பரீட்சை எழுதினோம். பரீட்சையில் இருவரும் சித்தியடைந்து, 1953 ஜனவரி 2ம் தேதி இருவருக்கும் ஒருசேர நியமனம் கிடைத்து. எனக்குக் கொழும்பில் சுகாதாரப்பகுதியிலும் தம்பிக்கு கொழும்பு பகுப்பாய்வாளர் பகுதியிலும் வேலை கிடைத்தது. கொழும்புக்கு போவதற்கு புகையிரதப் பயணச்சீட்டும் அந்தந்த இலாகாவினால் வழங்கப்பட்டிருந்தது.

வீட்டில் ஒருபுறம் மட்டற்ற மகிழ்ச்சியும் மறுபுறம் இருவரும் ஒரே நேரத்தில் வீட்டைவிட்டுப் போவது சொல்லொணாச சோகமாகவும் இருந்தது. மேலும், நாங்கள் வளர்த்த ஆடு மாடு யாவற்றையும் விற்கவேண்டி ஏற்பட்டது. இனி வீட்டில் ஆண்துணை இல்லை. எனவே, எனது அக்காவின் மகனை (எட்டாம் வகுப்பு) வீட்டில் ஆச்சி, அக்கா ஆகியோருடன் தங்கும்படி ஒழுங்கு செய்துவிட்டு கொழும்புக்குச் சென்றோம். நாங்கள் கொழும்புக்கு வருகின்றோம் என்பதை கொழும்பு கிராண்ட்பாஸ் போலிஸ் ஸ்டேஷனில் சார்ஜன்ட் ஆக வேலை பார்த்த ஒன்றுவிட்ட அண்ணருக்கு அறிவித்துவிட்டு போனோம். அவர் எமது ஆச்சியின் சகோதரி (குஞ்சி) மகன். (போலிஸ் அண்ணா என்று எங்களால் அழைக்கப்பட்டவர்). அவர் எமக்காக மருதானையில் (ஹல்ஸ்ட்ரப்ஃ - Hultsdoruf, Colombo 12) Travelers Home இல் ஓர் அறை ஒழுங்குபடுத்தி இரண்டு கட்டில், மெத்தை மற்றும் எமக்குத் தேவையான சகல பொருட்களும் இரண்டு இரண்டாக வாங்கி வைத்திருந்தார். 

நாங்கள் ரயிலில் வருவது தெரிந்ததும், போலிஸ் அண்ணர், “எக்காரணம் கொண்டும் ரயிலிலிருந்து இறங்கக் கூடாது. ரயில் கடைசி ஸ்டேஷனில் நிற்கும். எஞ்சினை கழற்றி மாட்டும்போதுகூட பெட்டியிலேயே இருந்துகொள்ள வேண்டும், என்று கட்டளையிட்டார். ரயில் நின்றபோது, ரயிலிலிருந்த அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினர். நாங்களோ பெட்டியில் அசையாமல் கடைசிவரை உட்கார்ந்திருதோம். எல்லோரும் போன பின்பு போலிஸ் அண்ணர், பெட்டி பெட்டியாக பார்த்துக்கொண்டு வந்து எங்களைத் தொலைந்துவிடாமல் கண்டுபிடித்துவிட்டார்.

நாங்கள் கொழும்பை அடைந்ததும் எம்மை கூட்டிக்கொண்டு போய் மேற்கூறிய விடுதியில் விட்டுவிட்டு முகாமையாளரிடமும் எங்களை அறிமுகப்படுத்திவிட்டு சென்றார். போலிஸ் அண்ணர் அடிக்கடி ரவுண்ட்ஸ் போகும்போது இரவில் போர்டிங்குக்கும் வருவது எமக்கு மிகுந்த மரியாதையாக இருந்தது.

நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததால் தனிமை எங்களை வருத்தவில்லை. ஆனால் அடிக்கடி வீட்டு ஞாபகம் வந்து மனதைச் சஞ்சலப்படுத்திய வண்ணம் இருக்கும். இப்படியாக ஒரு மாதம் முடிந்து அந்த மாதச் சம்பளமாக ஆளுக்கு 155 ரூபாய் கிடைத்தது. போர்டிங் காசு ரூபாய் 60 போக மிகுதி 95 ரூபாவை கைச்செலவுக்கென வைத்திருந்தோம்.
  
அன்றைக்கு ரவுண்ட்ஸ் வந்த போலிஸ் அண்ணர், “சம்பளம் வந்துவிட்டதா? என்று கேட்டார். நாங்களும் “ஆம். போர்டிங் காசு 120 கொடுத்தோம். மீதி இருக்கு என்று பதிலளித்தோம். உடனே அவர், வீட்டுக்கு காசு அனுப்பியாயிற்றா? என்று கேட்டார். நாங்கள் இன்னும் அனுப்பவில்லை என்றோம்.  அதற்கு அவர் என்ன கஷ்டமாக இருந்தாலும் முதல் வேலையாக வீட்டுக்கு உங்களால் அனுப்பக்கூடியளவு பணத்தை உடனடியாக அனுப்பவேண்டும். இது உங்களுடைய கடமை.என்று கண்டிப்புடன் கூறினார். அக்கடமையை ஆச்சி உயிருடன் இருக்கும்வரை நாம் செய்துவந்தோம். இன்று அண்ணரும் இல்லை, ஆச்சியும் இல்லை.


இப்படியே இரண்டு வருடங்கள் கொழும்பில் இருக்கும்போது தம்பிக்கு நுவரெலியாவிற்கு மாற்றம் வந்தது. அப்போது என் சீனியப்புவின் (பெரியப்பா) மகன் நவரத்தினம் வெள்ளவத்தையில் ஒரு வீட்டில் தனியறையில் இருந்தார். தம்பி நுவரெலியா போன பின்பு நான் போர்டிங்கில் தனியாக இருப்பதை அறிந்து தன்னுடன் வந்து இருக்கும்படி கூறி வெள்ளவத்தைக்கு கூட்டிக்கொண்டு போனார்

------
தொடரும்

Monday 6 October 2014

சொல்வனம் இதழில்: துலா

சுருக்கம்


யாழ்ப்பாணத்தில் நீர்த்தேவைகள் மழையினாலும், கிணறுகளினாலும் மட்டுமே பூர்த்திசெய்யப்படுவதை பலரும் அறிந்திருக்கக்கூடும். இன்றைக்கும் அரசாங்கம் குடிநீரை குழாய்மூலம் விநியோகிக்க தேவையிராமல், புதிதாக கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கிணறும் சேர்த்தே கட்டப்படுகின்றது. இந்நிலையில், கடந்த நூற்றாண்டில் பெரும் தோட்டங்களுக்கு பாரிய அளவில், மனித வலுவை மட்டுமே கொண்டு கிணறுகளிலிருந்து  நீர் இறைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொறியே துலா ஆகும். ஒவ்வொரு இழுவையிலும் 130 கிலோ (இரண்டு ஆள் எடை) நீரை இழுக்கும் சக்தி வாய்ந்த துலாவில், ஆட்கள் ஏறி நின்று, தமது எடையை பயன்படுத்தி நீர் இறைப்பார்கள். சில வேளைகளில் அப்படி நீர் இறைக்கும்போது, ஆட்கள் தூக்கி எறியப்பட்டு படுகாயமடையும் அபாயங்களும் உண்டு. தாத்தாவின் அண்ணரும் அப்புவும் அவ்வாறு எறியப்பட்டிருக்கிறார்களாம். இது முற்றுமுழுதாக பனைமரத்தின் பாகங்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டதாகும்

இத்தகைய பொறியான துலாவைப்பற்றி தாத்தா எழுதிய கட்டுரை பரிசீலிக்கப்பட்டு, 114வது சொல்வனம் இதழில் வெளியாகியிருக்கின்றது.


கட்டுரை

பழந்தமிழர் வேளாண்மைத் தொழில் நுட்பம்


துலா – பயன்பாடும் வடிவமைப்பும்

அந்தக்காலத்தில், (1930 களில்) யாழ்ப்பாணத்தின் தோட்டங்களின் தண்ணீர்த் தேவைகளை நிவர்த்தி செய்ய துலாக்கள் இன்றியமையாததாக இருந்தன. மின்சாரப் பாவனையும், பெட்ரோல் டீசல் பாவனையும் மிக அரிதான அந்தக் காலக்கட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்களோ, நவீன சாதனங்களோ இருக்கவில்லை. பணம் படைத்தவர்கள் கூட்டாகச் சேர்ந்து அமைத்து தமக்கு தேவையான காலத்தில் தமது தோட்டங்களுக்கு பயன்படுத்திய, மாடுகளைக் கட்டி இழுக்கும் சொரிவாளி சூத்திரங்களும் சங்கிலி பூட்டி மாடு இழுக்கின்ற இரட்டை வாளி சூத்திரங்களும்கூட மிக அரிதாகத்தான் காணப்பட்டன.
அப்போது பெரும்பாலான தோட்டங்களில் கிணறுகளும் அவற்றில் நீர் இறைக்க ஒவ்வொரு கிணற்றுக்கும் தலா ஒவ்வொரு துலாவும் இருக்கும். துலாவின் எல்லாப் பாகங்களும் பனைமரத்தின் பகுதிகளைப் பயன்படுத்தியே செய்யப்பட்டிருக்கும். இதன் இயக்கம் ரயில்வே கடவைகளில் பயன்படுத்தப்படும் தடுப்பை அல்லது ஒரு சீசா (see saw)வை ஒத்திருக்கும்.
Pulley_Wheel_Village_Farming_Ancient_Axis_Water_Agriculture_Pumps_Manual

துலாவால் நீர் இறைத்தல்

துலாவைப் பயன்படுத்தி பெரிய தோட்டங்களுக்கு நீர் இறைக்க முடியும். ஒவ்வொரு இழுவையிலும் 35 கலன் (130 லிட்டர்) நீரை துலாவால் இழுக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், அவ்வளவு எடையுள்ள நீரை, கைகளால் இழுக்க முடியாது என்பதால், துலாவில் மனிதர்கள் ஏறி, தமது எடையைப் பயன்படுத்தி நீர் இறைப்பார்கள். கிணற்றின் அளவைப் பொறுத்து இரண்டு பேர் அல்லது நான்கு பேர் துலாவில் ஏறவேண்டியிருக்கும்.
ஆரம்பத்தில், படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு துலா நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கும்போது அதன் பின்புறம் நிலத்தில் தொட்டுக்கொண்டிருக்கும். துலாவின்மேல் ஏணிப்படிகள் போன்ற அமைப்புகளில் மனிதர்கள் ஏறி இறங்க முடியும். சிறு கிணறு ஒன்றுக்கு, முதலில் இரண்டு பேர் துலாவில் ஏறுவார்கள். சமநிலை தவறி விழுந்துவிடாமல் இருப்பதற்கு, ஆடுகால் மரங்களில் கட்டப்படிருக்கும் ஓடுகயிற்றை லேசாகப் பிடித்துக்கொள்வார்கள். ஒருவர் அடிப்பாகத்தில், நிலத்துக்கு அருகிலும், மற்றவர் முன்பாகத்தில் அச்சுலக்கைக்கு மேலும் நிற்பார்கள். இப்போதும் துலா நிமிந்து நிற்கும். துலாவைப் கீழே பதித்து நீர் அள்ளச் செய்வதற்கு அச்சுக்கு மேல் நிற்பவர் துலாவின் நுனியை நோக்கி ஏற ஆரம்பிக்கும் அதேநேரம், துலாவின் பின்புறம் இருப்பவரும் அச்சை நோக்கி ஏறுவார். இதனால் துலா பதிந்து, பீலிப்பட்டை கிணற்றினுள் நீரைத் தொட்ட உடனேயே அது சரிந்து நீரை அள்ளத் துவங்கும்.
இப்போது துலா நுனியில் நிற்பவர் நீர் அள்ளப்படுவதைக் கவனிப்பார். நீர் கோலி முடிந்ததும், அவர் துலாவின் அச்சை நோக்கி பின்னோக்கி நகர்வார். அதேநேரம் துலாவின் அச்சுக்குக் கீழ் நிற்பவரும் துலாவின் பின்புறமாக நகர்வார். இப்போது, துலா மேலே நிமிரத் துவங்கும். பீலிப்பட்டை நீருடன் மேலே வந்ததும், கிணற்று வாயிலில் (மிதியில்) நிற்பவர் பீலிப்பட்டையை சரித்து மிதியில் இருக்கும் பீலியில் நீரை ஊற்றுவார். அந்நீர் பீலி வழியாக வாய்க்கால் ஊடாக தோட்டத்துக்கு ஓட, தோட்டத்தில் நிற்பவர் அந்நீரை திருப்பிவிட்டு பயிர்களுக்கு பாய்ச்சுவார்.
பீலிப்பட்டையிலிருந்து நீர் வெளியேறிய உடனே துலா கொஞ்சம் கீழ்நோக்கி பதிய ஆரம்பிக்கும். அப்போது, துலாவை இன்னும் பதிய வைப்பதற்காக, துலாவில் நிற்கும் இருவரும் மறுபடியும் முன்னோக்கி ஏறுவார்கள். இப்படியாக முன்னும் பின்னும் நடந்து நடந்து துலாவால் நீர் இறைப்பார்கள். தொடர்ந்து நீர் இறைப்பதால், வாய்க்காலில் நீர் தடையில்லாமல் தொடர்ந்து பாய்ந்துகொண்டிருக்கும்.
அன்றாடத் தேவைகளுக்காக நீர் அள்ளப்படும் கிணறுகளில், மேற்படி துலாவில் துலாக்கயிறு இல்லாமல் சாதாரண கயிற்றில் சாதாரண வாளி பொருத்தப்படிருக்கும். பெண்களும்கூட கயிற்றை இழுத்து துலாவை பதியவைத்து நீர் கோலி, அள்ள முடியுமாறு சமநிலையில் துலா வைக்கப்படிருக்கும். அவ்வாறு சமநிலையில் இல்லையென்றால், தேவையான பக்கத்தில் பாரமான கற்கள் கட்டப்பட்டு சமநிலை பேணப்படும்.
இத்தகைய பயனுள்ள துலாவினால் ஆபத்துக்களும் இல்லாமலில்லை. எனக்கு 13 வயதாக இருக்கும்போது (1941 இல்), நாங்கள் குத்தகைக்கு எடுத்த தோட்டமொன்றில், ஒருநாள் நானும் இரண்டு அண்ணர்களும் துலாவால் நீர் இறைத்துக்கொண்டிருந்தோம். நான் துலாவின் நுனிப்பகுதியிலும் எனது இரண்டாவது அண்ணர் (பண்டிதர் என்று அழைக்கப்பட்டவர்) துலாவின் பின்பகுதியிலும் ஏறி நடந்துகொண்டிருக்க மூன்றாவது அண்ணர் கீழே, கிணற்று மிதியில் நின்றுகொண்டிருந்தார். வழக்கம்போல நீர் கோலிவிட்டு துலா நிமிர்ந்துகொண்டிருக்கும்போது திடீரென்று பீலிப்பட்டைக் கயிறு அறுந்துவிட்டது. பெருத்த ஓசையோடு பீலிபட்டை கிணற்றுக்குள் விழ, துலா முழுவிசையோடு சட்டென்று நிமிர்ந்தது. பலமுறை துலாவில் நீர் இறைத்துப் பழக்கப்பட்டதால், துலாவில் நின்ற நாங்கள் இருவரும் ஓடுகயிற்றை இறுக்கமாகப் பிடித்திருக்கவில்லை. எனவே, துலா நிமிர்ந்த வேகத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில் நான் சமநிலை தவறி வாய்க்காலில் விழ, இரண்டாவது அண்ணர் துலாவிலிருந்து தூக்கி வீசப்பட்டார். உயரம குறைவாக இருந்ததால், இருவரும் பெரிய காயங்கள் இல்லாமல் தப்பிவிட்டோம். ஆனால் எங்கள் அப்பு (அப்பா) ஒருமுறை இவ்வாறு பெரிய துலாவொன்றிலிருந்து வீசப்பட்டு படுகாயம் அடைந்திருக்கிறாராம்.
Thula_Antique_Well_Wheel_Pulley

துலா ஒன்றைத் தயார்செய்தல்

துலா ஒன்றைச் செய்வதற்கு, முதலில் 20 – 25 முழம் நீளமுள்ள வைரமான பனையைத் தேர்ந்தெடுப்பார்கள். அதனை சரிசமமான இரு பாதிகளாக நீளவாக்கில் பிளந்து அதன் வெளித்தோலை (பட்டையை) அழுத்தமாகச் சீவியெடுப்பார்கள். அந்த இரு பாதி பனைமரத்துண்டுகளிலும் நிறையத் துளைகளை வரிசையாக இட்டு, அவை இரண்டையும் ஒருசேர வைத்துப் பொருத்தி, சீவிய சிறு பனைமரத் துண்டுகளை அத்துளைகளூடாக செலுத்தி சேர்த்துவிடுவார்கள். துலாவில் ஏறுவதற்கு ஒரு ஏணிபோல இந்தத் துண்டுகள் பயன்படுத்தப்படும்.
பின்பு, துலாவின் அச்சுலக்கையைச் (Axis) செய்வதற்கு பனை மரத்திலான இன்னொரு கட்டையை எடுத்துக்கொள்வார்கள். அதைக் கிடையாக வைத்து, அதன் உருளையான சுற்றுப்புறத்தில் மேல் அரைவாசியை தட்டையாகவும் கீழ் அரைவாசி சுற்றுப்புறத்தை சீரான வளைவாகவும் (ஆடுகால் கட்டைகளில் உருள்வதற்கு வசதியாக) செதுக்குவார்கள். பிறகு மேற்கூறிய முழுப்பனைமர அமைப்பினை எடுத்துக்கொண்டு நடுவில் பனைமரத்தின் பாரமான அடிப்பாகம் பின்புறமாகவும், பாரம் குறைந்த நுனிப்பாகம் முன்புறமாகவும் இருக்கும்படி வைத்து, சமநிலைப்புள்ளியைக் கண்டறிந்து, ஒரு பெரிய துளையிட்டு அதில் அச்சை இறுக்கமாகச் செருகிவிடுவார்கள். இப்போது துலா தயார். இனி இதனை ஆடுகாலில் பொருத்தவேண்டும்
ஆடுகால் என்பது, கிணற்றிற்கு அருகில் துலாவைத் தாங்கி நிற்பதற்காக மரங்களால் அமைக்கப்படுவதாகும். நான்கு மரங்களை 10 அடி சதுரத்தில் கிணற்றுக்கு அருகில் நடுவார்கள். இரண்டு வைரமான கட்டைகளை மரங்களில் வைத்து அம்மரங்களை இரண்டிரண்டாக இணைத்து கீழே படத்தில் காட்டியதுபோல் கட்டிவிடுவார்கள். பிறகு துலாவைத் தூக்கி அச்சுலக்கை ஆடுகாலின் கட்டைகளில் பொருந்துமாறு வைக்கவேண்டும். இதற்கு, முதலில், துலாவை ஆடுகால் கட்டைகளுக்கு இடையில் நிலத்தில் வைப்பார்கள். பிறகுஆடுகாலின் கட்டையொன்றில் கயிறு கட்டி, துலாவிற்குக் கீழாக கயிற்றை செலுத்தி, மறுபக்கம் அடுத்த ஆடுகாலுக்கு மேலே கயிற்றை எடுத்து இழுப்பார்கள். அதேநேரத்தில் ஒருவர் தரையில் கிடக்கும் துலாவின் பின்புறத்தை நெம்பி எழுப்புவார். விளைவாக துலா உயர்ந்து ஆடுகால் கட்டைகளுக்கு மேலே வரும்போது, அச்சு துளையில் அச்சை நுழைத்து இறுக்க அடிப்பார்கள். அச்சு நன்கு இறுகியதும், கயிற்றை எடுத்துவிடுவார்கள். துலா ஆடுகாலில் தங்கி நுனிப்பக்கம் நிமிர்ந்து நிற்கும்.
rope_pulley_Vintage_Design_Engineering_Well_Farming_Water_Land_Ground
துலாக்கயிறு என்பது பனம் ஈர்க்கினால் பின்னப்பட்ட தடித்த கயிறாகும். பனங்குருத்தில் இருந்து ஓலை பிரித்தெடுக்கும்போது ஈர்க்குகளையும் பிரித்து வெயிலில் உலர்த்துவார்கள். பின்பு அவற்றை 15-20 ஈர்க்குகள் கொண்ட புரிகளாக பிரித்து, பெண்கள் ஜடை பின்னுவதுபோல் மூன்று புரிகள் வைத்துக் கயிறாக பின்னுவார்கள். இக்கயிறு ஒவ்வொரு இழுவையிலும் 130 கிலோ நீரை தூக்கும் அளவிற்கு பலமுள்ளதாகவும் பலவருடங்களுக்கு அறுந்து போகாதபடியும் இருக்கும்
இப்போது துலாவின் நுனியில் பனம் ஈர்க்கினால் திரித்த துலாக்கயிற்றை நிமிர்ந்து நிற்கும் நுனித்துலாவில் கட்டி, கீழே இழுத்தால், துலா முன்பக்கம் பதிந்து கிணற்று வாயிலுக்கு (மிதிக்கு – நின்று தண்ணீர் அள்ளும் இடத்துக்கு-) வரும். இப்போது ஈர்க்குக் கயிற்றின் மறுமுனையில் வாளி/கடகம் போன்ற பெரிய பீலிப்பட்டையைக் கட்டுவார்கள்.
பீலிப்பட்டை என்பது 35 கலன் (130 லிட்டர் அல்லது 13 வாளி) நீரைக் கொள்ளக்கூடியதாக பனை ஓலையால் பெட்டி இழைப்பதுபோல் இழைத்துச செய்யப்படுவது. அடிப்பாகத்தில் ஒரு மூலையும் மூன்று பக்கங்களில் மூன்று மூலைகளும் வரும்படியாக பனை ஓலையால் இழைத்து, மேல் விளிம்புக்கு பனை மட்டையைச சீவி வளைத்துச சுற்றிக் கட்டி பலப்படுத்துவார்கள். பின்பு, பீலிப்பட்டை கிணற்றின் உட்சுவர்களில் உரசும்போது, மூலைகளைப் பாதுகாப்பதற்காக, பனைமட்டையிலிருந்து உரிந்து எடுத்த நாரினால் நான்கு மூலைகளுக்கும் பொத்துவார்கள். இந்தப் பீலிப்பட்டையில் பட்டைக்கல் பொருத்தப்படும்.
  
பீலிப்பட்டையின் புகைப்படங்கள்
பட்டைக்கல் – ஒரு வைரமான கல்லை வட்டவடிவமாக 3-4 அங்குலத் தடிப்பில் வெட்டி எடுத்து அதன் நடுவில் துளையிட்டு, உருண்டையான மரக்கம்பு ஒன்றை கல்லின் துவாரத்தில் இறுக்கி பீலிப்பட்டையின் மட்டையுடன் இணைத்துக் கட்டுவார்கள். பட்டைக்கல் என்பது பீலிப்பட்டை தண்ணீர் கொண்டுவரும்போது சுருங்காமல் இருக்கவும், கிணற்றுக்குள் தண்ணீரில் தாமதமில்லாமல் சரிந்து தண்ணீர் கோலவும் உதவுகின்றது. இனி, துலாக்கயிற்றின் முனையில் முடிச்சுப் போட்டு பீலிப்பட்டை அமைப்பை அதில் பிள்ளைக் கயிற்றால் இணைப்பார்கள்.
பிள்ளைக் கயிறு என்பதும் பனை ஈர்க்குகளால் ஆனது. ஆனால், துலாக்கயிறு போல தடிப்பாக இல்லாமல் ஓடுகயிறு போல நீளமாக இருக்கும். இதைப் பயன்படுத்தி பீலிப்பட்டையையும் பட்டைக்கல்லையும் சுற்றிக்கட்டி மேலே கொண்டுவந்து துலாக்கயிற்றில் போட்டிருக்கும் முடிச்சில் கட்டிவிடுவார்கள்.
ஓடுகயிறு என்பது பனை ஈர்க்கினால், துலாக்கயிறைவிட மெலிதாக, ஒரு கைப்பிடிக்குள் அடங்குமாறு செய்யப்படுவது. துலா மேல் நடப்பவர்கள் பிடித்துக்கொள்வதற்காக இது ஆடுகாலில் கட்டப்பட்டிருக்கும்.
இப்படியாக ஒரு துலாவை முழுமையாக உருவாக்கி நிலைப்படுத்துதல் என்பது ஒரு கலை. தச்சர்களும் தச்சு வேலை தெரிந்த மற்றவர்களும்தான் இவ்வேலைகளை செய்ய முடிந்தது. துலாவின் உருவாக்கத்தில்கூட யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதிகளின் அடையாளமான, கற்பகத் தருவான பனைமரத்தின் பகுதிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டமை இவ்வகையான துலாவின் வடிவமைப்பானது சென்ற நூற்றாண்டு யாழ்ப்பாணப் பாரம்பரியத்தின் எச்சங்களில் ஒன்று என்பதை சுட்டிநிற்கின்றது.
-----------
இராஜரட்ணம் ஆறுமுகம் 

**********************
இக்கட்டுரைக்கு, துலாவின் உண்மையான புகைப்படங்கள் என்னிடம் சொந்தமாக இல்லை. இணையத்தில் கிடைத்த சில படங்களை சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு சுட்டியுடன் அனுப்பியிருந்தேன். சில காரணங்களால் அவர்கள் அவற்றை பிரசுரிக்கவில்லை. அந்தப் படங்களோடு சேர்ந்த முழுப்பதிவை, இங்கே தந்திருக்கிறேன். 

சொல்வனம் கட்டுரையின் சுட்டி

(கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றிய கருத்துக்களை மட்டும் சொல்வனம் தளத்தில் சென்று இடலாம். மற்ற கருத்துக்களை இங்கேயே, கீழே இடவும்)







Popular Posts