நாங்கள் இருவரும் பரீட்சையில் சித்தியடைந்ததையிட்டு
எங்கள் குடும்பம் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தது.
இருந்தும் குடும்பத்தில் வறுமையே
தாண்டவமாடியது. எனவே
எங்கள் குலத்தொழிலான கமத்தொழிலில் (விவசாயம்) ஈடுபட்டோம். படிக்கும்போது
பகுதிநேர தொழிலாக செய்துவந்த தோட்டவேலையில் முழுநேரமாக ஈடுபட்டோம்.
அப்பொழுது ஏற்கனவே SSC சித்தியடைந்த அண்ணன் கூட்டுறவுப் பரிசோதகர் பதவிக்கு
விண்ணப்பித்திருந்தார். வைரவக்
கடவுள் கிருபையால் அவருக்கு மட்டக்களப்பு மூதூர் பகுதியில் வேலை கிடைத்தது. அவர்
வெளியூர் போனதன் பின் எங்கள் குடும்பப் பொறுப்பு எங்கள் தாயார் தலையில் ஏறியது. அவருக்கு
உறுதுணையாக நாங்களும் இருந்துவந்தோம்.
இப்படி இருந்துவரும் பொழுது 1952
இல்,
இலங்கை அரச வர்த்தமானியில்
புகையிரதப் பதிவினரால் Underguard வேலைக்கு (புகையிரதம் புறப்படுவதற்காக கொடி காட்டுதல், புகையிரதப்
பெட்டிகளை இணைத்து, பிரித்து
விடுதல் போன்ற பணிகள் அடங்கிய வேலை) விளம்பரம்
வந்தது. அதற்கு
விண்ணப்பம் அனுப்பினேன். கொழும்பில்
மருதானையில் பரீட்சை என்று கடிதம் வந்தது. அன்றுவரை புகைவண்டியையே காணாமல் இருந்த எனக்கு,
கொழும்புக்குப் புகைவண்டியில் போவதென்றால் பயமாக இருந்தது.
மேலும் ஆச்சிக்கும் அக்காவுக்கும்
இந்த வேலையில் அறவே விருப்பம் இல்லை. ரயில்
பெட்டிகளை சேர்க்கும் போது பெட்டிகளுக்கு இடையே நசுங்கி விடுவாய் என்று பயந்துகொண்டிருந்தார்கள்.
பின்னர் எழுதுவினைஞர் வேலைக்கு விளம்பரம் வந்தபோது 18-21 வயது நிரம்பிய SSC சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றனர். அதற்கு
நாங்கள் இருவரும் விண்ணப்பித்து பரீட்சை எழுதினோம்.
பரீட்சையில் இருவரும்
சித்தியடைந்து, 1953 ஜனவரி 2ம்
தேதி இருவருக்கும் ஒருசேர நியமனம் கிடைத்து. எனக்குக் கொழும்பில் சுகாதாரப்பகுதியிலும்
தம்பிக்கு கொழும்பு பகுப்பாய்வாளர் பகுதியிலும் வேலை கிடைத்தது. கொழும்புக்கு
போவதற்கு புகையிரதப் பயணச்சீட்டும் அந்தந்த இலாகாவினால் வழங்கப்பட்டிருந்தது.
வீட்டில் ஒருபுறம் மட்டற்ற மகிழ்ச்சியும் மறுபுறம்
இருவரும் ஒரே நேரத்தில் வீட்டைவிட்டுப் போவது சொல்லொணாச சோகமாகவும் இருந்தது. மேலும், நாங்கள்
வளர்த்த ஆடு மாடு யாவற்றையும் விற்கவேண்டி ஏற்பட்டது.
இனி வீட்டில் ஆண்துணை இல்லை. எனவே, எனது
அக்காவின் மகனை (எட்டாம்
வகுப்பு) வீட்டில்
ஆச்சி, அக்கா ஆகியோருடன் தங்கும்படி ஒழுங்கு செய்துவிட்டு கொழும்புக்குச் சென்றோம். நாங்கள்
கொழும்புக்கு வருகின்றோம் என்பதை கொழும்பு கிராண்ட்பாஸ் போலிஸ் ஸ்டேஷனில் சார்ஜன்ட்
ஆக வேலை பார்த்த ஒன்றுவிட்ட அண்ணருக்கு அறிவித்துவிட்டு போனோம். அவர்
எமது ஆச்சியின் சகோதரி (குஞ்சி) மகன். (போலிஸ்
அண்ணா என்று எங்களால் அழைக்கப்பட்டவர்). அவர் எமக்காக மருதானையில்
(ஹல்ஸ்ட்ரப்ஃ - Hultsdoruf, Colombo 12)
Travelers Home இல் ஓர் அறை ஒழுங்குபடுத்தி இரண்டு கட்டில், மெத்தை
மற்றும் எமக்குத் தேவையான சகல பொருட்களும் இரண்டு இரண்டாக வாங்கி வைத்திருந்தார்.
நாங்கள் ரயிலில் வருவது தெரிந்ததும், போலிஸ் அண்ணர், “எக்காரணம் கொண்டும் ரயிலிலிருந்து இறங்கக் கூடாது.
ரயில் கடைசி ஸ்டேஷனில் நிற்கும். எஞ்சினை கழற்றி மாட்டும்போதுகூட பெட்டியிலேயே
இருந்துகொள்ள வேண்டும்”, என்று கட்டளையிட்டார். ரயில் நின்றபோது, ரயிலிலிருந்த அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக
வெளியேறினர். நாங்களோ பெட்டியில் அசையாமல் கடைசிவரை உட்கார்ந்திருதோம். எல்லோரும்
போன பின்பு போலிஸ் அண்ணர், பெட்டி பெட்டியாக பார்த்துக்கொண்டு வந்து எங்களைத்
தொலைந்துவிடாமல் கண்டுபிடித்துவிட்டார்.
நாங்கள் கொழும்பை அடைந்ததும் எம்மை கூட்டிக்கொண்டு போய்
மேற்கூறிய விடுதியில் விட்டுவிட்டு முகாமையாளரிடமும் எங்களை அறிமுகப்படுத்திவிட்டு
சென்றார். போலிஸ்
அண்ணர் அடிக்கடி ரவுண்ட்ஸ் போகும்போது இரவில் போர்டிங்குக்கும் வருவது எமக்கு
மிகுந்த மரியாதையாக இருந்தது.
நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததால் தனிமை எங்களை
வருத்தவில்லை. ஆனால்
அடிக்கடி வீட்டு ஞாபகம் வந்து மனதைச் சஞ்சலப்படுத்திய வண்ணம் இருக்கும். இப்படியாக
ஒரு மாதம் முடிந்து அந்த மாதச் சம்பளமாக ஆளுக்கு 155
ரூபாய் கிடைத்தது. போர்டிங்
காசு ரூபாய் 60 போக மிகுதி 95 ரூபாவை கைச்செலவுக்கென வைத்திருந்தோம்.
அன்றைக்கு ரவுண்ட்ஸ் வந்த போலிஸ் அண்ணர், “சம்பளம்
வந்துவிட்டதா?” என்று கேட்டார். நாங்களும் “ஆம். போர்டிங்
காசு 120 கொடுத்தோம். மீதி
இருக்கு” என்று பதிலளித்தோம். உடனே அவர், “வீட்டுக்கு
காசு அனுப்பியாயிற்றா?” என்று கேட்டார். நாங்கள் “இன்னும் அனுப்பவில்லை” என்றோம். அதற்கு அவர் “என்ன கஷ்டமாக இருந்தாலும் முதல் வேலையாக வீட்டுக்கு
உங்களால் அனுப்பக்கூடியளவு பணத்தை உடனடியாக
அனுப்பவேண்டும். இது
உங்களுடைய கடமை.”
என்று கண்டிப்புடன் கூறினார். அக்கடமையை ஆச்சி உயிருடன் இருக்கும்வரை நாம் செய்துவந்தோம். இன்று
அண்ணரும் இல்லை, ஆச்சியும்
இல்லை.
இப்படியே இரண்டு வருடங்கள் கொழும்பில் இருக்கும்போது தம்பிக்கு
நுவரெலியாவிற்கு மாற்றம் வந்தது. அப்போது
என் சீனியப்புவின் (பெரியப்பா) மகன்
நவரத்தினம் வெள்ளவத்தையில் ஒரு வீட்டில் தனியறையில் இருந்தார். தம்பி
நுவரெலியா போன பின்பு நான் போர்டிங்கில் தனியாக இருப்பதை அறிந்து தன்னுடன் வந்து
இருக்கும்படி கூறி வெள்ளவத்தைக்கு கூட்டிக்கொண்டு போனார்.
------
தொடரும்
சாஜண்ட் பெரியப்பா நல்ல mentor.வீட்டுக்கு வரும்போது பல விஷயங்களைப்பேசிக்கொண்டிருப்பார்கள்.ஜோதிடம் அவருக்கு பிடித்தவிடயம்.astrological magazine தொகுப்பாக்கி வைத்திருந்தார்.நவரத்தினம் ஐயாவுக்கு சங்கீதம்.வயலின் வாசிப்பார்.
ReplyDelete